ராஜீவ் காந்தி சிலையை உடைத்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
திருநெல்வேலி பாப்பான்குளம் பிரதான சாலையில் அமைந்துள்ள ராஜீவ் காந்தியின் மார்பளவு உருவச் சிலையை சமூக விரோதிகள் சிலர் சிதைத்து, தலையைத் துண்டித்துள்ளனர். இந்தச் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இந்தச் சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை செய்து குற்றவாளிகளை அடையாளம் கண்டு உடனே அவர்களைக் கைது செய்ய வேண்டும்.
அவரது சிலையைச் சிதைத்து, அவமதித்ததை காங்கிரஸ் கட்சியினர் எவரும் சகித்துக் கொள்ள மாட்டார்கள். இத்தகைய சமூக விரோத செயலைச் செய்தவர்கள் யார் என்பதை அடையாளம் காண வேண்டிய பொறுப்பு காவல் துறையினருக்கு இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.