ஆயிரம் ஆண்டுகள் பழைமையான சூலக்கல் கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம், சாத்தரசன்கோட்டை அருகே உள்ள பாப்பாகுடியில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான யானை சிற்பத்துடன் கூடிய சூலக்கல்லை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.
பாப்பாகுடியில் கண்டெடுக்கப்பட்ட யானை சிற்பத்துடன் கூடிய சூலக்கல்.
பாப்பாகுடியில் கண்டெடுக்கப்பட்ட யானை சிற்பத்துடன் கூடிய சூலக்கல்.

சிவகங்கை மாவட்டம், சாத்தரசன்கோட்டை அருகே உள்ள பாப்பாகுடியில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான யானை சிற்பத்துடன் கூடிய சூலக்கல்லை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.

வேலூரில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வரும் பாப்பாகுடியைச் சேர்ந்த மூவேந்தன் என்பவர்  பாப்பாகுடி பகுதியில் பழைமையான கல்சிற்பங்கள் உள்ளிட்ட தொல் பொருள்கள் இருப்பதாக தகவல் தெரிவித்தார். அதன் பேரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, தொல்லியல் ஆய்வாளர் கொல்லங்குடி புலவர் காளிராசா ஆகியோர் பாப்பாகுடியைச் சேர்ந்த ராமக்கண்ணன் உதவியுடன் ஆய்வு செய்தனர்.  இந்த ஆய்வில், யானை சின்னத்துடன் கூடிய சூலக்கல் இருப்பது தெரிய வந்தது. 

இது குறித்து  வே.ராஜகுரு கூறியது : மன்னர் ஆட்சி காலத்தில் கோயில்களின் தினசரி வழிபாட்டுக்காக, விளை நிலங்கள் மீது விதிக்கப்படும் வரியை நீக்கி, அவற்றை கோயில்களுக்குத் தானமாக வழங்குவது வழக்கம்.  அந்த வகையில் சிவன் கோயிலுக்கு வழங்கும் நிலம் தேவதானம் என்றும், திருமால் கோயில்களுக்கு வழங்கும் நிலம் திருவிடையாட்டம் என்றும், சமண, பெளத்தப் பள்ளிகளுக்கு வழங்குவது பள்ளிச் சந்தம் என்றும் அழைக்கப்படுகின்றன.

அவ்வாறு சிவன் கோயிலுக்குத் தானமாக வழங்கும் நிலங்களின் நான்கு எல்லைகளிலும் திரிசூலம் பொறிக்கப்பட்ட சூலக்கற்கள் நடப்பட்டு அவை பாதுகாக்கப்படும். அதுவே திருமால் கோயில் எனில் சங்கு, சக்கரமும், சமணப் பள்ளி எனில் முக்குடையும், பெளத்தப் பள்ளி எனில் தர்மசக்கரமும் எல்லைக்கற்களில் பொறிக்கப்பட்டிருக்கும்.

பாப்பாகுடி சமயன் கோயிலில் ஒரு சூலக்கல்லும், சக்கரம் பொறிக்கப்பட்ட ஒரு திருவாழிக்கல்லும் உள்ளது. இதனை அப் பகுதி மக்கள் தற்போது வழிபட்டு வருகின்றனர். சமயன் கோயிலில் உள்ள சூலக்கல் 3 அடி உயரம், ஒன்றரை அடி அகலம் கொண்டது. இதன் நான்கு பக்கங்களிலும் புடைப்புச் சிற்பமாக திரிசூலம் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பக்கத்தில் திரிசூலத்தை தன் முதுகில் தாங்கிச் செல்லும் யானை உருவம் உள்ளது. அதன் மறுபக்கத்தில் சூலத்தின் மேல்பகுதியில் சந்திரனைக் குறிக்கும் பிறை வடிவம் உள்ளது.

இக்கல்லில் யானைச் சிற்பம் இருப்பதன் மூலம் அத்திகோசத்தார் எனும் யானைப் படை வீரர்கள் வழங்கிய தேவதான நிலத்தில் நட்டுவைக்கப்பட்டதாக இதனைக் கருதலாம்.

வணிகர்கள் தங்களின் பாதுகாப்புக்காக வைத்திருந்த யானைப் படையினர் அத்திகோசத்தார் எனப்பட்டனர். வணிகப் பெரு வழிகளில் வணிகர்களைப் பாதுகாப்பதற்காக இவர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். மேலும் மன்னர்கள் கோயில்களுக்கு கொடையளிக்கும் போது உடனிருந்து, அக்கொடையை பாதுகாக்கும் பணிகளையும் அத்திகோசத்தார் செய்துள்ளனர். இவர்களை பற்றி பூலாங்குறிச்சி கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாப்பாகுடியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள காளையார்கோயில், மதுரை-தொண்டி வணிகப் பெருவழியாக இருந்துள்ளது. இங்கு தங்கியிருந்த அத்திகோசத்தார் எனும் யானைப் படையினர், அவ்வூர் சிவன் கோயிலுக்கு பாப்பாகுடியை தானமாக வழங்கி இருக்கலாம். 

தானமாக வழங்கிய நிலத்தில் அவர்கள் இக் கல்லை நட்டு வைத்திருக்கலாம். சோழர் கால கலை நயத்துடன் உள்ளதால் இது கி.பி.11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதலாம். இதேபோன்று, சோழர் காலத்தைச் சேர்ந்த காளைச் சின்னம் உள்ள நான்கு முக சூலக்கல்லை புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தினர் புதுக்கோட்டை அருகே வாழமங்கலத்தில் கண்டெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com