வள்ளியூர் மகளிர் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீரென உயிரிழந்தார்.
கூடங்குளம் அணுமின் நிலைய தீயணைப்புப் பிரிவில் பணியாற்றி வருபவர் நாகர்கோவில் ஓட்டுபிறைத் தெருவைச் சேர்ந்த கிறிஸ்டோபர்(56). இவர் பெண்களிடம் பாலியல் தொந்தரவு செய்ததாகப் புகார் எழுந்தது.
இந்நிலையில், கூடங்குளம் அருகே உள்ள ஸ்ரீ நாராயணபுரத்தைச் சேர்ந்த நடராஜன், கலாவதி ஆகியோரது மகளிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக கூடங்குளம் காவல் நிலையத்தில் கிறிஸ்டோபர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கிறிஸ்டோபர் தலைமறைவாக இருந்து வருகிறார். கூடங்குளம் போலீஸார் இவரை தேடி வந்தனர்.
கிறிஸ்டோபரின் செல்லிடப்பேசி எண்ணை போலீஸார் கண்காணித்ததில், அவர் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள காப்பிக்காடு ஊரைச் சேர்ந்த லீலாபாய் (55) என்ற பெண்ணோடு அடிக்கடி பேசி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, கூடங்குளம் போலீஸார் கிறிஸ்டோபரின் செல்லிடப்பேசியை கண்காணித்து காப்பிக்கோடு சென்றனர். அதற்குள் கிறிஸ்டோபர் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார்.
இதையடுத்து, லீலாபாயையும் அவரது மகன் வெனில்குமாரையும் போலீஸார் விசாரணைக்காக அழைத்து வந்தனர். பின்னர், அவர்களை வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு ஆய்வாளர் வனிதா மற்றும் போலீஸார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், லீலாபாய் வாந்தி எடுத்து மயக்கமடைந்தாராம். அவரை வள்ளியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர், நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் லீலாபாய் இறந்தார்.
இதையடுத்து, அவரது சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுதொடர்பாக நாகர்கோவில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.