புதுக்கோட்டையில் பழைய அரசு மருத்துவமனை உள்ள இடத்தில் ரூ. 10 கோடியில் ஆயுஷ் மருத்துவமனை அமைக்கப்படும் என்றார் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர்.
புதுக்கோட்டை மாவட்ட பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில், பெண்களுக்கான மார்பகப் புற்றுநோயைக் கண்டறிவதற்காக புதிதாக வாங்கப்பட்டுள்ள கருவியின் மேமோகிராம் செயல்பாட்டை திங்கள்கிழமை தொடங்கி வைத்து, மேலும் அவர் பேசியது:
புதுக்கோட்டை நகரில் செயல்பட்டு வந்த மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனை, மருத்துவக் கல்லூரியுடன் இணைக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில், பழைய அரசு மருத்துவமனை உள்ள இடத்தில் ரூ.10 கோடியில் ஆயுஷ் மருத்துவமனை அமைக்கப்படும்.
தமிழகம் முழுவதும் உள்ள சிறுநீரக நோயாளிகள் சிகிச்சை பெறும் வகையில், ரூ. 100 கோடியில் சிறுநீரக ஒப்புயர்வு மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
மேலும், சி.டி., எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மையங்களும் மாநிலத்திலுள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்குத் தேசியத் தரச்சான்று கிடைத்துள்ளது என்றார் அமைச்சர். இந்த நிகழ்வுக்கு, மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தலைமை வகித்தார். மாநில வீட்டு வசதி வாரியத் தலைவர் பி.கே. வைரமுத்து முன்னிலை வகித்தார்.
ஊரக நலப்பணிகள் துணை இயக்குநர் ம. சந்திரசேகரன், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அழ. மீனாட்சிசுந்தரம், மனநல மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம், குடும்ப நலத் துறை துணை இயக்குநர் மலர்விழி, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் துணைத் தலைவர் ஹேமந்த்ராஜ், நகராட்சி ஆணையர் ஜீவா சுப்பிரமணியன் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.