தமிழகத்தில் ஹிந்தியையும், சம்ஸ்கிருதத்தையும் திணிக்க வேண்டும் என மத்திய அரசு தீவிரமாக செயல்படுவதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ குற்றம்சாட்டினார்.
மதுரையிலிருந்து திங்கள்கிழமை சென்னை செல்ல விமான நிலையம் வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
உடலில் சோர்வு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். கவலைப்படும் அளவிற்கு உடல் நலத்தில் பாதிப்பில்லை. நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு இரண்டு வாரம் ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஹிந்தியையும், சம்ஸ்கிருதத்தையும் திணிக்க வேண்டும் என்ற தீவிரத்தோடு மத்திய அரசு செயல்படுகிறது. மாநில அமைச்சர் செல்லூர் கே. ராஜூவுக்கு சில அடிப்படை விஷயங்கள் புரியவில்லை. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கூட ஒரு கேள்விக்கு அடிப்படை உண்மையே தெரியாமல் பதில் கூறியுள்ளார். ஆனால், அவர் எனக்கு நல்ல நண்பர் என்றார் வைகோ.