திமுக தலைவர் ஸ்டாலின் வழக்கமாக செய்தியாளர்களின் சந்திப்பின் போது கூட கையில் ஒரு துண்டுச் சீட்டை வைத்துக் கொண்டு அதில் குறிப்பெடுத்து பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
ஒரு எதிர்க்கட்சித் தலைவர் இப்படி துண்டுச் சீட்டு வைத்துக் கொண்டு பேசுகிறாரே என்று எதிர்க்கட்சிகள் அவ்வப்போது அங்கலாய்ப்பது உண்டு.
இது அவரிடம் நேரடியாகவே கேள்வியாக்கப்பட்டது. துண்டுச் சீட்டு இல்லாமல் உங்களால் பேச முடியாது என்று பாஜகவினர் குற்றஞ்சாட்டுகிறார்களே என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு ஸ்டாலின் பதில் அளிக்கையில், எதையும் புள்ளி விவரத்தோடு, ஆதாரத்தோடு பேச வேண்டும். தமிழிசை, பொன். ராதாகிருஷ்ணன், எச். ராஜா போல் வாய்க்கு வந்தபடி பேசக் கூடாது என்று பதில் அளித்திருந்தார்.
இந்த பதில் கிடைத்தபிறகு எச். ராஜா விடுவாரா என்ன? ஆம் அதற்கு பதில் டிவீட் போட்டுவிட்டார்.
என்னவென்றால், பூனை மேல் மதில் போல் என்பது ஆதாரத்துடனான பேச்சோ என்று நக்கலடித்துள்ளார்.
ஸ்டாலின் பேசும் போது சில சமயங்களில் இவ்வாறு வாய்தவறி பேசிவிடுவார். அதைத்தான் ராஜா குறிப்பிட்டுள்ளார்.