நிகழாண்டில் தமிழகத்தில் 69 ஆயிரம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர்களில் 52 ஆயிரத்து 166 பேருக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கப்பட்டதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் குணமடைந்து விட்டதாகவும் மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காசநோயை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. அதுமட்டுமன்றி, 2025-க்குள் அந்நோயை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
அதன் பயனாக, காசநோய் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு மேம்பட்டு வருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை காசநோயைக் குணப்படுத்தும் விகிதம் கணிசமாக உயர்ந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த நோயின் தாக்கத்தால் பாதிக்கப்படும் நோயாளிகளில் 84 சதவீதம் பேரை முதல் சிகிச்சையிலேயே குணப்படுத்துவதாகவும், தொடர் சிகிச்சைகள் மூலம் மீதமுள்ளவர்களையும் பூரண குணமாக்குவதாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமன்றி, சிகிச்சை காலத்தில் நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து அளிப்பதற்காக நிதியுதவிகளும் வழங்கப்பட்டு வருவதாகக் கூறியுள்ளனர். இந்த நிலையில், நிகழாண்டில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காசநோய் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டிருந்தோரின் தரவுகளை ஆய்வு செய்தபோது நாடு முழுவதும் 14.71 லட்சம் பேருக்கு அந்நோயின் தாக்கம் இருந்தது தெரியவந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில்தான் காசநோய் பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. அதன் நீட்சியாகவே நடப்பாண்டின் புள்ளிவிவரங்களும் அமைந்துள்ளன.
நிகழாண்டில் உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 2.9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை எடுத்துக் கொண்டால் 69,465 பேருக்கு அந்நோயின் பாதிப்பு இருந்தது. அவர்களில், தனியார் மருத்துவமனைகளில் 17,299 பேரும், அரசு மருத்துவமனைகளில் 52,166 பேரும் முதல்கட்ட சிகிச்சை பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.