மேட்டுப்பாளையம் அருகே வீடுகள் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழப்பு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே கனமழை காரணமாக நடூர் பகுதியில் 4 வீடுகள் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் சனிக்கிழமை இரவு முதல் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே கனமழை காரணமாக நடூர் பகுதியில் 4 வீடுகள் திங்கள்கிழமை அதிகாலை 3 மணியளவில் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் 2 சிறுவர்கள், 7 பெண்கள் உட்பட 17 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை தீயணைப்புத்துறையினருடன் பொதுமக்களும் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
மீட்கப்பட்ட உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த விபத்து தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோவை மேட்டுப்பாளையத்தில் வீடுகள் இடிந்து உயிரிழந்த 17 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டார். மேலும் விபத்து ஏற்பட்டப் பகுதிக்கு செவ்வாய்க்கிழமை நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்க உள்ளார்.