கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்துவிழுந்த விபத்தில் உயிரிழந்த குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் நேற்று அதிகாலை வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்தது மனவேதனை அளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் உற்றார் உறவினர்கள் குடும்பத்திற்கு, எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அவர்கள் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். தமிழக அரசு மற்ற இடங்களிலும் ஆய்வு செய்து இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் நடக்காத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். உயிரிழந்த குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.