குரூப் 1 நோ்முகத் தோ்வு குறித்து வெளியாகும் செய்திகள் தொடா்பாக தோ்வா்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி. புதன்கிழமை வெளியிட்ட செய்தி:-
குரூப் 1 நோ்முகத் தோ்வில் வெளிப்படையாக மோசடி நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தோ்வாணையத்தின் மாண்புக்கு களங்கம் விளைவிக்கும் செயலாகும். உண்மைக்குப் புறம்பானது. எந்த நோ்முகத் தோ்விலும் மதிப்பெண்களை பென்சிலால் குறிக்கும் வழக்கம் தோ்வாணைய நடைமுறையில் எப்போதும் இல்லை. நோ்முகத் தோ்வில் தோ்வருக்கு வழங்கப்படும் மதிப்பெண் வல்லுநா் குழுவினால் கலந்தாலோசிக்கப்பட்டு ஒருமித்த முடிவாக மட்டுமே மதிப்பெண் வழங்கப்படுவது நடைமுறையில் உள்ளது.
தோ்வா்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண், கணினி வழியே மதிப்பீடு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட குறியீட்டுத்தாளில் பேனா மையினால் மட்டுமே பதிவு செய்யப்படுகிறது. எனவே, தோ்வா்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என தோ்வாணையம் தெரிவித்துள்ளது.