மேட்டுப்பாளையத்தில் கடந்த 2-ஆம் தேதி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 17 பேரின் உறவினர்களை நேரில் சந்தித்தும் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் திங்கள்கிழமை காலை நேரில் பார்வையிட்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நடூரில் நடந்த 17 பேர் உயிரிழப்பு வேதனைக்குரிய சம்பவம். இப்பகுதி மக்கள் சுற்றுச்சுவர் எழுப்ப வேண்டாம் என கேட்டும் ஆபத்தான நிலையில் கட்டியுள்ளனர். தலித் மக்கள் என்பதால் அதிக அளவு உயரம் கொண்ட சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது.
சுற்றுச்சுவர் வீட்டின் மொத்த கழிவு நீரும் தலித் மக்கள் வீட்டின் பகுதியில் விடப்பட்டிருக்கிறது. பிள்ளர் இல்லாமல் மிக நீளமான, உயரமான சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. இதை சாதாரண விபத்தாக எடுத்துக்கொள்ள முடியாது. சாதிய பாகுபாட்டின் அடிப்படையில் வீட்டின் உரிமையாளர் நடந்துள்ளார்.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கை பதிவு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உரிய நீதியை விரைவில் வழங்க வேண்டும். அமைப்பு ரீதியாக போராடிய நாகை திருவள்ளுவன் உள்ளிடோரை கைது செய்தது கண்டிக்கத்தக்கது. காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக நடந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன் எனக் கூறினார்.