பொள்ளாச்சி பகுதியில் தமிழக முதல்வர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் சுவரொட்டி அச்சடித்து ஒட்டியதாக வால்பாறை வழக்குரைஞர் சங்கத் தலைவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
பொள்ளாச்சியை அடுத்த ஜோதி நகரைச் சேர்ந்தவர் ஷாநவாஸ் கான் (58). வால்பாறை வழக்குரைஞர் சங்கத் தலைவராக உள்ளார். திமுக ஆட்சிக் காலத்தில் அரசு வழக்குரைஞராகவும் இருந்துள்ளார்.
திமுகவில் இருந்து விலகி அழகிரியின் ஆதரவாளராக சில காலம் இருந்தார். தற்போது திமுகவில் இணைய முனைப்பு காட்டிவருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழக முதல்வர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் சுவரொட்டி அச்சடித்து பொள்ளாச்சி நகரின் முக்கிய பகுதிகளில் திங்கள்கிழமை இரவு ஒட்டினாராம். மேலும், பிரசுரமும் வினியோகித்தாராம். இதையறிந்த பொள்ளாச்சி கிழக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரை செவ்வாய்க்கிழமை காலை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஷாநவாஸ் கானை கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் உள்ளிட்ட திமுகவினர் சந்தித்துப் பேசினர்.