சென்னை, கோவை, மதுரை நகரங்களில் முதல் கட்டமாக 500 மின்சார பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோல பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதற்காக 2019-20 நிதிநிலை அறிக்கையில் போக்குவரத்துத் துறைக்காக ரூ. 1,297.83 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாசற்ற மின்சாரப் பேருந்துகளை அறிமுகப்படுத்தும் வகையில், ஜெர்மன் வளர்ச்சி வங்கியின் கடனுதவியிடன் ரூ. 5,890 கோடி செலவில் 12,000 புதிய பிஎஸ்4 தர பேருந்துகளும், 2 ஆயிரம் மின்சாரப் பேருந்துகளும் வாங்கப்படும். இதில் முதல் கட்டத்தில் சென்னை, கோவை, மதுரை ஆகிய இடங்களில் 500 மின்சாரப் பேருந்துகளும், தமிழகம் முழுவதும் 2000 பிஎஸ்4 பேருந்துகளும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், மாணவ, மாணவிகளுக்கான போக்குவரத்து பயணக் கட்டணச் சலுகைகாக ரூ. 766 கோடி, டீசல் மானியத்துக்காக ரூ. 250 கோடி எனப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதற்காக போக்குவரத்துத் துறைக்கு 2019-20 நிதிநிலை அறிக்கையில் ரூ. 1,297.83 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.