ஹஜ் புனிதப் பயணத்துக்கு கூடுதலாக 1,500 இடங்களை ஒதுக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து, பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள கடிதம்:-
கடந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள 3,542 இடங்களை மத்திய அரசு ஒதுக்கியது. ஆனால், எனது வேண்டுகோளைத் தொடர்ந்து, அதன் எண்ணிக்கையை 3, 816 ஆக மத்திய அரசு உயர்த்தியது.
இந்த நிலையில், 2019-ஆம் ஆண்டில் ஹஜ் பயணம் மேற்கொள்ள 3,534 இடங்களை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. அதேசமயம், இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக தமிழகத்தில் இருந்து 6,379 விண்ணப்பங்கள் ஏற்கெனவே பெறப்பட்டுள்ளன.
ஒதுக்கப்பட்ட இடங்களுக்கும், பயணம் மேற்கொள்ள வந்துள்ள விண்ணப்பங்களுக்கும் இடையிலான இடைவெளி மிகப்பெரிய அளவில் உள்ளது. இந்த இடைவெளியை நிரப்பும் வகையில், கூடுதலாக ஆயிரத்து 500 இடங்களை ஒதுக்கிட மத்திய சிறுபான்மை நல அமைச்சகத்துக்கு தாங்கள் உத்தரவிட வேண்டும். இதனால், கூடுதலான ஹஜ் பயணிகள் பயன்பெறுவர் என்று தனது கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.