புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழக சிஆர்பிஎஃப் வீரர் சிவசந்திரனுக்கு நினைவுச் சின்னம், சிலை அமைக்க வேண்டும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இதில், தமிழகத்தைச் சேர்ந்த சிவசந்திரன், சுப்பிரமணியன் ஆகியோரும் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் முழு அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க அவர்களது சொந்த கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், அரியலூர் மாவட்ட சிஆர்பிஎஃப் வீரர் சிவசந்திரன் குடும்பத்தினரை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இதையடுத்து, சிவசந்திரனின் உருவப்படத்திற்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த வைகோ, சிவசந்திரனுக்கு நினைவுச் சின்னம், உருவச் சிலை அமைக்க வேண்டும் என்றார். மேலும், இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் கிள்ளி எறியப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.