பயங்கரவாதிகள் வேரோடு அழிக்கப்பட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார்.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அரியலூர் மாவட்டம், கார்குடி கிராமத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன்(33) என்ற சி.ஆர்.பி.எப்., வீரரும் வீர மரணம் அடைந்தார்.
இந்நிலையில், இவரது குடும்பத்தினரை ஞாயிற்றுக்கிழமை மாலை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய வைகோ தொடர்ந்து, சிவச்சந்திரனின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், சிவச்சந்திரனின் 2 வயது மகனை தூக்கி ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து வைகோ கூறியது: பயங்கரவாதிகள் கிள்ளி எறியப்பட வேண்டும். அவர்கள் வேரோடு அழிக்கப்பட வேண்டும். சிவச்சந்திரன் தனது மகனை ஐபிஎஸ் ஆக்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். ஒரு மகனை இழந்த அவரின் பெற்றோர் வேலைக்குச் செல்ல வேண்டாம் எனக் கூறிய போதும் நாட்டுக்காகச் செல்கிறேன் எனக் கூறியிருக்கிறார் சிவச்சந்திரன்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், காந்திமதிக்கு நல்லதொரு அரசு வேலையை ஏற்படுத்தித் தரவேண்டும். கிராம மக்களும் சிவச்சந்திரனுக்கு சிலை அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர் என்றார். தொடர்ந்து, சிவச்சந்திரன் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு சென்ற வைகோ அங்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.