மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக திங்கள்கிழமை வந்திருந்த பொன்.ராதாகிருஷ்ணன் கோவை ரயில் நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. எப்போது வேண்டுமானாலும் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளிவரும் என்ற அளவுக்கு பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. எந்தெந்தக் கட்சிகளுடன் தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்பது குறித்து வெளியிட முடியாது. தமிழகத்தில் உள்ள பெரிய கட்சிகள் அனைத்தும் பாஜகவுடன் கூட்டணி அமைக்கத் தயாராக உள்ளன.
அதில் தகுதியான கட்சியைத் தேர்வு செய்து கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. மக்களின் தேவைகளை உணர்ந்து அதற்கேற்றாற்போல் கூட்டணி அமைக்கப்படும்.
தமிழக நலனில் பாஜக தொடர்ந்து அக்கறை செலுத்தி வருவதை மக்கள் உணர்ந்துள்ளனர். எனவே, பாஜக அமைக்கும் கூட்டணி நிச்சயம் வெற்றிக் கூட்டணியாக இருக்கும். நடிகர் ரஜினிகாந்தின் அறிக்கை குறித்து தற்போது கருத்துக் கூற விரும்பவில்லை என்றார்.