சேலம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில், இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே உள்ள தெலுங்கனூர் கிராமத்தில், 2016-ஆம் ஆண்டு ஜூலை 21-ஆம் தேதி தெருவில் நடந்து சென்ற சிறுமியை பத்தாம் வகுப்பு முடித்திருந்த 16 வயது சிறுவன், தனது வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதில் காயமடைந்த சிறுமி இறந்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவன், சடலத்தை வீட்டில் உள்ள பாத்திரத்தில் மறைத்து வைத்து விட்டார் .
இதனிடையே சிறுமி காணாததால் அவரது பெற்றோர் ஊர் முழுவதும் தேடினர். ஆனால், சிறுமி கிடைக்கவில்லை. பின்னர் சிறுமி மாயமானது குறித்து கொளத்தூர் காவல்நிலையத்தில் புகார் செய்தனர்.
இதுகுறித்து விசாரித்த போலீஸார் சிறுவனின் வீட்டுக்குச் சென்று சோதனையிட்டனர். அப்போது, வீட்டில் உள்ள அண்டாவில் சிறுமியின் சடலம் இருப்பது தெரியவந்தது.
இதன் பின்னர் 16 வயது சிறுவனை கைது செய்து, ராசிபுரத்தில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.இந்த வழக்கு விசாரணை சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமாரி தற்போது 19 வயதான இளைஞருக்கு 10 வருடம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.மேலும் செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞர் காந்திமதி ஆஜரானார்.