அதிமுக கூட்டணி குறித்த கேள்விக்கு எண்ணிக்கையால் மட்டும் வலுவான கூட்டணி உருவாகிவிடாது என்று மாநிலங்களவை திமுக குழு தலைவர் கனிமொழி கூறினார். சென்னை விமான நிலையத்தில் புதன்கிழமை அவர் அளித்த பேட்டி:
அதிமுக, பாஜக, பாமக எல்லாம் இணைந்து வலுவான கூட்டணி அமைத்துள்ளதாக கேள்வி எழுப்புகிறீர்கள். வலுவான கூட்டணி என்பது எண்ணிக்கையால் மட்டுமே வந்துவிடாது. தமிழக மக்களின் பார்வையில் பாஜக எப்படி இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். அது மட்டும் அல்லாமல் அதிமுக மீது பாமக வைத்திருக்கும் கடுமையான விமர்சனங்களை அனைவரும் அறிவர்.
அதிமுக ஆட்சியை குரங்கு கையில் கிடைத்த பூமாலை என்று கூட அன்புமணி கூறியுள்ளார். இப்போது பூமாலையா, குரங்கா என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். தமாகா திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை என்பதெல்லாம் தெரியாது என்றார்.