மீனவர்களுக்கு நவீன தொலைத்தொடர்பு கருவிகளை வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடந்தது. இதுகுறித்து, தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்தி:-
கடலில் மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவர்களை பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கு கம்பியில்லாத தகவல் தொடர்பு சாதனம் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்காக இயந்திரம் பொருத்தப்பட்ட 15 ஆயிரத்து 4 நாட்டுப் படகுகளுக்கு 75 சதவீத மானியத்தில் படகில் பொருத்தக் கூடிய 25 வாட் திறனுடைய கருவிகள் கொள்முதல்
செய்யப்பட்டுள்ளன. இந்த அதிஉயர் அதிர்வெண் கருவிகளை 5 மீனவர்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்து புதிய திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
தொலைத் தொடர்பு கோபுரங்கள்: தமிழகத்தில் உள்ள 13 கடலோர மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் தொலைத் தொடர்பு கோபுரங்கள், கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. பழவேற்காடு (திருவள்ளூர்), சென்னை காசிமேடு, நெமிலி (காஞ்சிபுரம்), மரக்காணம் (விழுப்புரம்), பரங்கிப்பேட்டை (கடலூர்), நாகப்பட்டினம், தரங்கம்பாடி, கோடியக்கரை (நாகப்பட்டினம்), கட்டுமாவடி (புதுக்கோட்டை), வேம்பார், புன்னக்காயல் (தூத்துக்குடி), உவரி (திருநெல்வேலி), குளச்சல், சின்னமுட்டம் (கன்னியாகுமரி) ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட தொலைத் தொடர்பு கோபுரங்கள், கட்டுப்பாட்டு அறைகளின் செயல்பாடுகளை முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார்.
1,500 ஆழ்கடல் மீன்பிடி விசைப் படகுகளைக் கொண்ட 80 மீனவக் குழுக்களுக்கு, ஒரு குழுவுக்கு தலா 2 செயற்கைக் கோள் தொலைபேசிகள் மற்றும் 2 நேவ்டெக்ஸ் கருவிகள் வீதம் மொத்தம் 160 செயற்கைக்கோள் தொலைபேசிகள் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்தையும் முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திரபாலாஜி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.