எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவுக்குத் தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் தினேஷ்குமார் தாக்கல் செய்த பொதுநல மனுவில், முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மெரீனா கடற்கரையை ஒட்டிய காமராஜர் சாலையில் பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரே ரூ.2.52 கோடி செலவில் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவுக்கான கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இந்த சாலையில் வைக்கப்பட்டிருந்த நடிகர் சிவாஜிகணேசனின் சிலை அகற்றப்பட்டுள்ளது.
மேலும் அந்த சாலையில் மேம்பாட்டுப் பணிகளைத் தவிர வேறு எந்தவிதமான கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் சட்டத்தின்படி சாலைகளின் குறுக்காக எந்த விதமான நிரந்தர கட்டுமானங்களையும் கட்டக்கூடாது. ஆனால் அரசியல் ஆதாயத்துக்காக கட்டப்பட்டு வரும் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர்நீதிமன்றம் திறப்புவிழா நடத்தக்கூடாது என உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவுபடி எவ்வித நிகழ்ச்சியின்றி எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவை தமிழக அரசு திறந்தது. இந்நிலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவுக்குத் தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து இன்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.