குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வருகை தந்துள்ளார்.
இதற்காக அவர் தில்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தார். அவருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து அங்கிருந்து, கிண்டி செல்லும் அவர் ஆளுநர் மாளிகையில் தங்கி சிறிதுநேரம் ஓய்வெடுக்கிறார். பின்னர் மாலை 4 மணியளவில் தி.நகரில் நடைபெறவுள்ள ஹிந்தி பிரச்சார சபா நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு மகாத்மா காந்தி சிலையை திறந்து வைக்கிறார்.