69 சதவீத இந்தியர்கள் மோடிக்கு வாக்களித்ததில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உறுதிபடத் தெரிவித்தார். இதுகுறித்து காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:
பலதரப்பட்ட மொழிகளும், மதங்களும் தான் இந்தியாவின் பலம். கடந்த 300 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்கள் பிரித்தாளும் சூழ்சியை ஏற்படுத்தி நம்மை ஆட்சி செய்தனர். அதேபோன்ற வழிமுறை தான் தற்போதும் பாஜக-வால் பின்பற்றப்பட்டு வருகிறது. தனது அமைச்சர்களுடன் கூட நரேந்திர மோடி கலந்து ஆலோசிப்பதில்லை.
எல்லா உத்தரவுகளும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து தான் பிறப்பிக்கப்படுகிறது. எல்லா முடிவுகளையும் பிரதமர் மோடி தான் எடுக்கிறார். மத்திய அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் எந்த அதிகாரமும் இன்றி உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரு அறையில் அடைக்கப்பட்ட பின்னர் தான் தொலைக்காட்சியில் தோன்றிய மோடி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து அறிவித்தார்.
அறிவித்த வாக்குறுதி எதையும் மோடி செயல்படுத்தியது இல்லை. அதனால்தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட 30 நாட்களில் கறுப்புப் பணம் மீட்கப்பட்டு, அது மக்களுக்கு கொடுக்கப்படும் என்று அறிவித்தார். ஜிஎஸ்டி குறித்து நான் ஏற்கனவே நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் தான் ஜிஎஸ்டி அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார்.
தற்போது முதலீடுகளும், வேலைவாய்ப்புகளும் இன்றி நமது நாடு உள்ளது. லட்சக்கணக்கில் தனிநபர் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும் என்றது, 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்பது போன்ற வாக்குறுதிகளை அள்ளி வீசினார். ஆனால், அவை எதுவும் தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை. பக்கோடா தயாரிப்பது ஒரு வேலை என்பதை மட்டும் தான் பிரதமர் மோடி கண்டுபிடித்துள்ளார்.
நாட்டிலுள்ள 69 சதவீத மக்கள் நரேந்திர மோடிக்காக வாக்களிக்க மாட்டார்கள். வடக்கில் உள்ள 7 மாநிலங்களைச் சேர்ந்த வெறும் 31 சதவீத மக்கள் மட்டும்தான் மோடிக்கு வாக்களித்துள்ளனர் என்று தெரிவித்தார்.