விழுப்புரம் எம்.பி. மறைவுக்கு பிரதமர், ஆளுநர் இரங்கல்
விழுப்புரம் எம்.பி., எஸ். ராஜேந்தின் மறைவுக்கு பிரதமர் மோடி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி: எம்.பி. ராஜேந்திரன் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி சுட்டுரையில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "மக்களவை உறுப்பினர் ராஜேந்திரனின் சமூக சேவைகளும், அதற்கான அவரின் முயற்சிகளும் நினைவில் கொள்ளப்படும். விழுப்புரம் தொகுதி மற்றும் தமிழ்நாட்டின் மேம்பாட்டுக்காக அவர் அயராது உழைத்துள்ளார். ராஜேந்திரனின் மறைவு வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்' என்று கூறியுள்ளார்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: சாலை விபத்தில் விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.ராஜேந்திரன் மறைந்து விட்டார் என்ற செய்தியை அறிந்து ஆழ்ந்த அதிர்ச்சியும், மிகுந்த துயரமும் அடைந்தேன். அவரது மறைவு விழுப்புரம் தொகுதி மக்களுக்கு மட்டுமின்றி அதிமுக நிர்வாகிகளுக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்று குறிப்பிட்டுள்ளார்.