மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தை மீண்டும் சர்வதேச தரம் வாய்ந்த கல்வி நிறுவனமாக மாற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிய துணைவேந்தராக பதவியேற்ற எம்.கிருஷ்ணன் புதன்கிழமை தெரிவித்தார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 17-ஆவது துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் எம்.கிருஷ்ணன் புதன்கிழமை பதவியேற்றார். பதவியேற்புக்கு முன்னதாக பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் துணைவேந்தர் அலுவலகத்தில், பதிவாளர் சின்னையா முன்னிலையில் கையெழுத்திட்டு பதவியேற்றார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் துணைவேந்தர் எம். கிருஷ்ணன் கூறியது:
உலகத்தரம் வாய்ந்த உயர்கல்வி நிறுவனமாக விளங்கிய மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் நற்பெயர் சில பிரச்னைகளால் சரிந்துள்ளது. எனவே, அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புடன் காமராஜர் பல்கலை.யை மீண்டும் சர்வதேச தரம் வாய்ந்த கல்வி நிறுவனமாக மாற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.
பல்கலைக்கழகத்தில் தரமான விடுதி, மாணவர்கள் விரும்பும் உணவை அளிக்கும் உணவுக்கூடம் ஆகியவை அமைக்கப்படும். கிராம வளர்ச்சிக்கு வித்திடும் வகையிலும், மாணவர்களின் வேலைவாய்ப்புக்கு வழிசெய்யும் வகையிலும் பாடத்திட்டங்கள் உருவாக்கப்படும். மாணவர்களிடம் வரவேற்பை பெறாத பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும். பல்கலைக்கழகத்தில் நேர்மையான, வெளிப்படையான நிர்வாகம் அமையும்.
நூலகத்தின் தரம் உயர்த்தப்படும். நெல் மற்றும் மல்லிகை ஆய்வு மையம், சர்வதேச தரத்தில் ஆய்வுக் கூடங்கள் அமைய நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, மாணவர்களின் குறைகள் உடனடியாக தீர்க்கப்படும். ஏற்கெனவே நடந்த தவறுகள் மீண்டும் நேராதவாறு கண்காணிப்புடன் கூடிய நடவடிக்கைகள் தொடரும் என்றார்.
பல்கலைக்கழக டீன் நல்லகாமன், தேர்வுகள் துறை கட்டுப்பாட்டு அலுவலர் ரவி மற்றும் பல்கலைக்கழக துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், சிண்டிகேட் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் புதிய துணைவேந்தருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.