பணியாளர்களுக்கு எதிரான கொள்கைகளை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாகக் குற்றம்சாட்டியும், 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தும் ஏஐடியுசி, சிஐடியு, ஏஐயுடியுசி, ஐஎன்டியுசி உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் வரும் 8,9 ஆகிய தேதிகளில் தேசிய அளவிலான வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.
நாடு முழுவதும் நடைபெறவுள்ள இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பொதுத்துறை வங்கி ஊழியர் சங்கங்களில் ஒரு பிரிவினர் அறிவித்துள்ளனர். இதனால் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கும் அரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
வரும் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் அகில இந்திய போராட்டத்தில் பங்கேற்கும் அரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போராட்டத்தால் அரசு நிர்வாகம் பாதித்தால், அனைத்துத்துறை ஊழியர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒப்பந்தப் பணியாளர்கள், வேலைநிறுத்தத்தில் பங்கேற்றால் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். வேலைநிறுத்தம் அன்று ஊழியர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளது.