திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மத்தியக் குழுவினர் புதன்கிழமை ஆய்வு செய்தனர்.
பாளையங்கோட்டை, மேட்டுத்திடலில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளது. இங்கு ஆண்டுதோறும் 150 மாணவர்-மாணவிகள் சேர்க்கப்படுகின்றனர். இங்கு கூடுதலாக 100 மருத்துவப் படிப்புக்கான இடங்களை ஒதுக்குமாறு தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கேற்ப இங்கு உள்கட்டமைப்பு வசதி, அதிநவீன கருவிகள் ஆகியவை சுகாதாரத் துறையால் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் மத்திய அரசின் நிதியுதவியுடன் கல்லூரியின் அருகே பல்நோக்கு மருத்துவமனையும் கட்டி முடிக்கப்பட்டு, திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது. எனவே, 2019-2020ஆம் கல்வியாண்டு முதல் கூடுதலாக 100 இடங்களைப் பெற தமிழக சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதையடுத்து, மருத்துவப் படிப்புக்கான இடங்களை அதிகரிக்க ஒப்புதல் அளிக்கும் இந்திய மருத்துவக் கழகத்தைச் சேர்ந்த குழுவினர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் புதன்கிழமை ஆய்வு செய்தனர். வியாழக்கிழமையும் (ஜன. 10) ஆய்வு நடைபெற உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.