சென்னையில் அனுமதியின்றி விளம்பரப் பதாகை வைத்ததாக விடுதலைச் சிறுத்தை கட்சி நிர்வாகிகள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
விடுதலைச் சிறுத்தை கட்சியின் சார்பில் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் இல்லம் அருகே கடந்த வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு முன்பாக விடுதலைச் சிறுத்தை கட்சிகள் சார்பில் அங்கு விளம்பரப் பதாகை வைக்கப்பட்டது. ஆனால், அங்கு விளம்பரப் பதாகை வைப்பதற்கு அனுமதியில்லை எனக் கூறி போலீஸார், அதை அகற்றுமாறு கூறினர். இதற்கு விடுதலைச் சிறுத்தை கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, போலீஸாரிடம் தகராறு செய்தனர்.
இச் சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே இச் சம்பவம் குறித்து மாநகராட்சி உதவி பொறியாளர் பிரபுதாஸ், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார், விடுதலைச் சிறுத்தை கட்சி நிர்வாகிகள் ஷாநவாஸ், நாகசாமி, வெங்கடேசன், பொன்னிவளவன்,குமார்,சீனிவாசன் ஆகியோர் மீது சனிக்கிழமை வழக்குப் பதிவு
செய்தனர்.