புதுவையில் வீடுகளுக்கான சொத்து வரியை 25 சதவீதம் குறைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
புதுவையில் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அரசால் விதிக்கப்பட்ட வீட்டு வரியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. எனவே, வீட்டு வரியில் 25 சதவீதத்தைக் குறைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. காமராஜர் கல் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 1,723 குடும்பங்களுக்கு தலா ரூ. 30 ஆயிரம் தவணைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் பயிர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், காப்பீடு செய்வதற்காக ரூ. 2.5 கோடியை காப்பீட்டு நிறுவனங்களுக்கு புதுவை அரசு வழங்கியுள்ளது என்றார் முதல்வர் நாராயணசாமி.