மக்களவைத் தேர்தலில் கூட்டணி குறித்து அமமுகவிடம் மாநிலத்தில் உள்ள சில கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன என்று அக்கட்சியின் துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் தெரிவித்தது:
மக்களவைத் தேர்தலில் கூட்டணி வைப்பது தொடர்பாக மாநிலத்தில் உள்ள சில கட்சிகள் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. தொகுதிப் பங்கீடு குறித்து ஏதேனும் முரண்பாடு ஏற்பட்டால், 2014 ஆம் ஆண்டில் ஜெயலலிதா தனியாக நின்றதுபோல 40 தொகுதிகளிலும் அமமுக தனியாகப் போட்டியிடும்.
திருவாரூர் தொகுதியில் அமமுக வேட்பாளருக்கு ஆதரவு அதிகமாக இருந்ததால்தான் ஆளும்கட்சியும், எதிர்க்கட்சியும் தேர்தலைப் போராடி ரத்து செய்தன.
அதேபோல, தமிழகம் முழுவதும் மக்கள் ஆதரவு அமமுகவுக்கு முழுமையாக உள்ளது. 40 தொகுதிகளிலும் அமமுக வெற்றி பெறும்.
அதிமுக, திமுகவை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் செயல்படுகின்றனர். திமுகவினர் கோரும் ஒப்பந்தப்புள்ளிகள் உடனடியாக வழங்கப்படுகின்றன. அதிமுகவும், திமுகவும் மறைமுகக் கூட்டணி வைத்துள்ளனர் என்றார் தினகரன்.