தமிழக முதல்வர் குறித்து கட்செவி அஞ்சலில் அவதூறு பரப்பியதாக கரூரில் திமுக பிரமுகரைப் போலீஸார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் (35). இவர், திமுகவில் மாவட்ட தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளராக உள்ளார். இவர் புதன்கிழமை தனது செல்லிடப்பேசியில் தமிழக முதல்வர் குறித்து அவதூறு செய்தி வெளியிட்டாராம்.
இதுதொடர்பாக கரூர் மாவட்ட அதிமுக தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் மஞ்சுநாதன் அளித்த புகாரின்பேரில் சின்னதாராபுரம் போலீஸார் அவரைக் கைது செய்து கரூர் கிளை சிறையில் அடைத்தனர்.
இதனிடையே வியாழக்கிழமை காலை லோகநாதனை கிளை சிறையில் முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, திமுக மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன், வழக்குரைஞர் அணி மாநில நிர்வாகி வழக்குரைஞர் மணிராஜ் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர்.