வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் அமமுக தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும் என அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தொகுதியில் அமமுக சார்பில் மக்கள் சந்திப்பு பிரசார கூட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்திருந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த மக்களவைத் தேர்தலில் ஜெயலலிதா தனித்துப் போட்டியிட்டு வெற்றிபெற்றதைப்போல், அவரது வழியைப் பின்பற்றி அமமுகவும் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றிபெறும். ராகுல் காந்தியைப் பிரதமராக்குவோம் என இங்கே கூறிவிட்டு, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மம்தா பானர்ஜி நடத்திய கூட்டத்திலும் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
அவரது நிலைப்பாட்டை சாணக்கியத்தனம் என்கின்றனர். மக்கள், தேர்தல் நேரத்தில் அவர்களுக்குத் தக்க பாடம் புகட்டுவர்.
கொடநாடு சம்பவத்தில் விசாரணைக்கு அஞ்சி முதல்வர் பதற்றப்படுகிறார். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கனவை பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது என்றார்.