தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள இளையராஜா -75 பாராட்டு விழாவுக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் சினிமா தயாரிப்பாளரான ஜே.எஸ்.சதீஸ்குமார் தாக்கல் செய்த மனுவில், சென்னையில் வரும் பிப்ரவரி 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்ற முடிவு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுவைக் கூட்டி எடுக்கப்பட்ட முடிவு அல்ல. தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்துள்ளார். மேலும் முன்னாள் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் சங்கத்துக்கு ஏற்கெனவே ரூ.7.73 கோடிக்கு முறையான கணக்குகளைக் காட்டவில்லை. இந்த நிலையில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டால் அந்த விழாவிலும் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளது.
எனவே, தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கான தேர்தல் மற்றும் பொதுக்குழுவை ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் கூட்ட உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இந்த மனு தொடர்பாக திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஜனவரி 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.