பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10% இடஒதுக்கீடு விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
10% இடஒதுக்கீடு தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், கொடிய விஷம்கொண்ட பாம்பை நல்ல பாம்பு என்று அழைப்பது போல 10% இடஒதுக்கீடு உள்ளது என்று விமர்சித்தார்.
பொருளாதாரத்தில் முன்னேறிய வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு என்பதில் அரசின் நிலைப்பாடு என்ன? எனக் கேள்வி எழுப்பிய மு.க.ஸ்டாலின் இந்த விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி ஒரு முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை அழைத்து, கருத்துக்களை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தொடர்ந்து பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 69% இடஒதுக்கீட்டை தமிழகம் மட்டுமே கடைபிடிக்கிறது. 10% இடஒதுக்கீடு தொடர்பாக அனைவரும் சேர்ந்து நல்ல முடிவை எடுப்போம். இந்த விவகாரத்தில் சமூக நீதிக்கு எந்த பாதிப்பும் வராது என்றார்.