எம்பிபிஎஸ்: தரவரிசைப் பட்டியல் வெளியீடு: நாளை முதல் மாணவர் சேர்க்கை 

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
எம்பிபிஎஸ்: தரவரிசைப் பட்டியல் வெளியீடு: நாளை முதல் மாணவர் சேர்க்கை 

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து திங்கள்கிழமை முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில், 5,400 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இதில், மாநில ஒதுக்கீட்டுக்கு 3,968 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 852 இடங்களும் உள்ளன. மீதமுள்ள 580 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்குச் செல்கின்றன.
 அதேபோன்று பல் மருத்துவம் எனப்படும் பி.டி.எஸ். படிப்புக்கு 1,940 இடங்கள் உள்ளன. மாநில ஒதுக்கீட்டில், 1,223 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டில், 690 இடங்களும் உள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு 27 இடங்கள் உள்ளன.
 இவற்றில், மாநில மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கையை, மருத்துவக் கல்வி இயக்குநரகம் நடத்துகிறது.
 இந்தாண்டு, "நீட்' நுழைவுத் தேர்வில் தகுதி பெற்ற, 68,020 பேர் இணையதளத்தில் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 60 ஆயிரத்து 997 பேர், விண்ணப்பங்களை சமர்ப்பித்தனர். விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, பட்டியல் சனிக்கிழமை வெளியிடப்பட்டது.
 அதன்படி, மாநில ஒதுக்கீட்டுக்கு 31 ஆயிரத்து 353 மாணவர்களும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 25 ஆயிரத்து 651 மாணவர்களும் தகுதி பெற்றுள்ளனர். இந்த தரவரிசைப் பட்டியலை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட செயலர் பீலா ராஜேஷ் மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழுச் செயலர் செல்வராஜன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
 மாநில அரசு ஒதுக்கீட்டில் நீட் தேர்வில் 685 மதிப்பெண் பெற்ற ஸ்ருதி முதலிடத்தையும், 677 இடத்தை பிடித்த அஸ்வின் ராஜ் இரண்டாம் இடத்தையும், 676 மதிப்பெண் பெற்ற, இளமதி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

10 சதவீத இடஒதுக்கீடு: இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: மருத்துவ மாணவர் சேர்க்கை திங்கள்கிழமை முதல் தொடங்குகிறது. அதேபோன்று சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வும் திங்கள்கிழமை நடைபெறும்.
 இதையடுத்து செவ்வாய்க்கிழமை முதல், பொது பிரிவினருக்கான கவுன்சிலிங் தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை உள்பட 10 நாள்கள் நடைபெறும். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான, 10 சதவீத இட ஒதுக்கீட்டு இடங்கள் குறித்து, அனைத்துக் கட்சிகள் கூட்டம் திங்கள்கிழமை மாலை 5.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது. அந்த கூட்டத்துக்கு பின் முடிவு தெரிய வரும் என்றார்.
 வெளி மாநிலங்களில் படித்த, 2,096 பேர் தகுதி
 மருத்துவப் படிப்பில், வெளிமாநிலத்தவர்கள், ஒதுக்கீட்டில் இடங்கள் பெறுவதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து, நிகழாண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் பெற்றோர் ஜாதி, பிறப்புச் சான்றிதழ் கேட்கப்பட்டது. இதில், சில குழப்பங்களும் ஏற்பட்டன.
 அதன்படி, அரசு ஒதுக்கீட்டில் தகுதி பெற்ற, 31 ஆயிரத்து 353 பேரில், தமிழகத்தை பூர்வீகமாகவும், 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை தமிழகத்தில் படித்துள்ளனர்.
 வெளிமாநிலங்களை பூர்வீகமாகக் கொண்டு, தமிழகத்தில், 6 முதல், பிளஸ் 2 வரை படித்தவர்கள், 156 பேரும், தமிழகத்தை பூர்விகமாகக் கொண்டு, வெளி மாநிலங்களில் படித்தவர்கள் 2,096 பேரும் தகுதி பெற்றுள்ளனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com