திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆனி வருஷாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் வருஷாபிஷேகம் நடைபெறுகிறது. நிகழாண்டு, வருஷாபிஷேகத்தையொட்டி, கோயில் நடை வியாழக்கிழமை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து, கும்பங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், அக்கும்பங்கள் விமான தளத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு, மூலவர், சண்முகர், வெங்கடாசலபதி, வள்ளி - தெய்வானை என வரிசையாக விமான அபிஷேகம் நடைபெற்றது.
இதையடுத்து, மூலவர், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. மாலையில் சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது. இரவில் குமரவிடங்கப்பெருமான், வள்ளியம்மன் தனித்தனி தங்க மயில் வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்தனர்.
வருஷாபிஷேக விழாவில், மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.