யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவற்றில் பெரும்பாலானவை ஆன்லைன் மூலமாக பதிவிறக்கம் செய்யப்பட்டவை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
அரசு மற்றும் தனியார் யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லுôரிகளில் பி.என்.ஒய்.எஸ். எனப்படும் இளங்கலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு 600-க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. குறிப்பாக, அரசுக் கல்லூரியில் 60 இடங்களும், தனியார் மருத்துவ கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டிற்கு 358 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 192 இடங்களும் உள்ளன.
இந்நிலையில், அந்தப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நிகழாண்டு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெற உள்ளது. அதற்கான விண்ணப்ப விநியோகம், கடந்த 1-ஆம் தேதி தொடங்கியது. ஆன்லைன் மூலமாக www.tnhealth.org www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களின் வாயிலாக விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்யலாம் என்றும், அல்லது யோகா - இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் நேரடியாகவும் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்திருப்பதாகவும், 800-க்கும் மேற்பட்டோர் நேரில் விண்ணப்பங்களை பெற்றுச் சென்றிருப்பதாகவும் இந்திய மருத்துவத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வரும் 19-ஆம் தேதி வரை விண்ணப்ப விநியோகம் நடைபெறும் என்பதால், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 22-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.