ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பதவியிடங்களை உள்ளடக்கிய மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் முதன்மைத் தேர்வுக்கு தமிழக அரசு சார்பில் இலவசப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து தமிழக மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: சென்னை பசுமை வழிச்சாலையில் இயங்கி வரும், அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையத்தில் மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் முதன்மைத் தேர்வுக்கு இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இந்தப் பயிற்சி மையத்தில் வகுப்பறைகள், தங்குமிடம், உணவு, நூலகம் போன்ற அனைத்து வசதிகளும் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் மாணவர்களுக்கு தரமான பயிற்சியாளர்களைக் கொண்டு இலவசமாகப் பயிற்சி அளிப்பதோடு, முதன்மைத் தேர்வு எழுதுபவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.3,000 ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது. இப்போது முதல் நிலைத் தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளன.
தமிழக மாணவர்கள் எங்கு பயிற்சி பெற்று முதல்நிலைத் தேர்வை முடித்துத் தேர்ச்சி பெற்றிருந்தாலும் முதன்மைத் தேர்வுக்கு (ஐஅந-ஙஅஐசந) இங்கு பயிற்சி பெறலாம். இந்த மையத்தில் 225 பேர் மட்டுமே தங்கிப் பயில உறைவிட வசதிகள் உள்ளன. எனவே, முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இரண்டு தினங்களுக்குள் www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.