பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகளை பொதுத்துறை நிறுவனங்களாக மாற்றக் கூடாது என வலியுறுத்தி தமிழகம் உள்பட நாடு முழுவதும் உள்ள 4 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
இது தொடர்பாக அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர்கள் சம்மேளத்தின் பொதுச் செயலாளர் சி. ஸ்ரீகுமார் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசின் பாதுகாப்புத்துறையின் கீழ் ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி செய்ய நாடு முழுவதும் 41 பாதுகாப்பு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் ஆவடி, திருச்சி, அருவங்காடு ஆகிய பகுதிகளில் 6 தொழிற்சாலைகள் உள்ளன.
அண்மைக் காலமாக இந்தத் தொழிற்சாலைகளை தனியாரிடம் ஒப்படைக்கும் நோக்குடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இந்தத் தொழிற்சாலைகளை பொதுத்துறை நிறுவனமாக மாற்றி நலிவடையும் சூழலில் தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்தோடு செயல்படுகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் உள்ள 41 பாதுகாப்புத்துறை நிறுவனங்களின் நுழைவுவாயில்களில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. மேலும் வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி நாடாளுமன்றம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அதில் கூறியுள்ளார்.