தமிழகத்தில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (ஜூலை 20) பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி வெள்ளிக்கிழமை கூறியது: தெற்கு மகாராஷ்டிரத்தில் இருந்து கர்நாடக கடலோரம் வரை குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காணப்பட்டது. இது தற்போது கர்நாடக கடலோரம் முதல் கேரள கடலோரம் வரை நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (ஜூலை 20) பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதுதவிர, வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் சனிக்கிழமை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டமாக இருக்கும். சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்றார் அவர்.
மழை அளவு: வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி, கோயம்புத்தூர் மாவட்டம் சின்னக்கல்லாரில் 100 மி.மீ., வால்பாறையில் 90 மி.மீ., வால்பாறை வட்டாட்சியர் அலுவலத்தில் 70 மி.மீ., அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், கன்னியாகுமரி மாவட்டம் கீழ் கோதையாற்றில் தலா 50 மி.மீ. மழை பதிவானது.