இந்திய கடற்படையின் கிழக்குப் பிராந்தியத்தில் ரோந்து மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, புதிய விமானப் படையணி பிரிவை கடற்படை தலைமை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் சென்னையில் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்தியம் ஆந்திர பிரதேசம் மாநிலம் விசாகபட்டணத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் கடற்படை விமான பிரிவு தளங்கள் வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் ராஜாளி, ராமேசுவரம் அருகே மண்டபத்தில் பருந்து என்ற பெயர்களில் இயங்கி வருகின்றன. இதில் ராஜாளியில் ஹெலிகாப்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. இதேபோல், மண்டபம் பருந்துவில் சிறிய ரக கண்காணிப்பு விமானங்கள் உள்ளன. இந்நிலையில் சென்னை மீனம்பாக்கத்தில் 2 புதிய அதிநவீன டோர்னியர் விமானங்கள் அடங்கிய படையணி பிரிவை கடற்படைத் தலைமை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் திங்கள்கிழமை சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.
அப்போது கரம்பீர் சிங் பேசியது:- இந்திய கடற்படை தன்னை பலப்படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்தப் புதிய படையணி பிரிவு கிழக்கு பிராந்திய கடற்படையின் வளர்ச்சியில் மற்றொரு மைல்கல்லாக இருக்கும். இந்திய கடல் பகுதியில் வந்து செல்லும் வணிகக் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ள படையணியில் இணைக்கப்பட்டுள்ள அதிநவீன டோர்னியர் விமானத்தில் கண்காணிப்பு ரேடார், உளவு பார்க்கும் மின்னணு கருவிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. இதன் மூலம் இந்திய கடல் பகுதியைத் துல்லியமாகக் கண்காணிக்க முடியும். பாதுகாப்பு பணிகளில் மட்டுமன்றி புயல், சுனாமி, கடல் சீற்றம் உள்ளிட்ட இயற்கை பேரிடர் காலங்களில் ஆபத்தில் சிக்கியவர்களை மீட்க விமானப் படையணி பிரிவு பெரிதும் உதவும்.
இந்தப் புதிய படையணி பிரிவு அமைக்கப்பட்டதன் மூலம் மூன்று படையணி தளங்களைக் கொண்ட கடலோர மாநிலம் தமிழகம் என்பதில் பெருமிதம் கொள்ளலாம் என்றார் கரம்பீர் சிங்.
இந்த நிகழ்ச்சியில் கடற்படை கிழக்கு பிராந்திய துணைத் தளபதி அதுல்குமார், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரி கே.ஜே.குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.