மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழைப் பொழிவு குறைந்ததால் பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது.
தென்மேற்குப் பருவமழை இம்மாதம் 8 -ஆம் தேதி தொடங்கியதையடுத்து, திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் தொடர் சாரல் மழை பெய்தது. இதனால், நீர்வரத்து அதிகரித்ததால் பாபநாசம் அணை நீர்மட்டம் உயர்ந்தது.
இந்நிலையில், கடந்த 2 நாள்களாக நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை குறைந்துள்ளதால் நீர்வரத்தும் குறைந்தது. புதன்கிழமை காலை நிலவரப்படி, பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 559.61 கனஅடியாக நீர்வரத்து குறைந்தது.
அணை நீர்மட்டம் 33.40 அடியாக உள்ளது. அணையிலிருந்து 25 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.
சேர்வலாறு அணை நீர்மட்டம் 51.18 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 58.50 அடியாகவும் உள்ளது. மணிமுத்தாறு அணைக்கு 369 கனஅடி நீர்வரத்து இருந்தது. குடிநீர்த் தேவைக்காக அணையிலிருந்து 275 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பருவமழை பெய்தால் அணைகளின் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது. பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக அதிகரித்தால் மட்டுமே நிகழாண்டு கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறக்க முடியும் என்ற நிலை உள்ளது.