சட்டப் பல்கலைக்கழக சீர்மிகு சிறப்புப் பள்ளியில் வழங்கப்படும் ஐந்தாண்டுகள் ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, வரும் 17-ஆம் தேதி தொடங்க உள்ளது.
இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள சீர்மிகு சிறப்புப் பள்ளி மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படும் பிளஸ்-2 முடித்தவர்களுக்கான ஐந்தாண்டுகள் ஒருங்கிணைந்த சட்டப் படிப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கான மூன்றாண்டு சட்டப் படிப்பு ஆகிய இளநிலை சட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் நடத்துகிறது.
இதில், முதல் கட்டமாக சீர்மிகு சிறப்புப் பள்ளியில் வழங்கப்படும் இளநிலை ஹானர்ஸ் சட்டப் படிப்புகளில் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. இந்தப் பள்ளியில் பி.ஏ.-எல்.எல்.பி., பி.பி.ஏ.-எல்.எல்.பி., பி.காம்.-எல்.எல்.பி., பிசிஏ-எல்.எல்.பி. ஆகிய சட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, வருகிற 17-ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெற உள்ளது.
இதற்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியுள்ள மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் சட்டப் பல்கலைக்கழக இணையதளத்திலும், பல்கலைக்கழக அறிவிப்புப் பலகையிலும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் மாணவர்களுக்கும் தனித்தனியே தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.