சாஸ்த்ரா சட்டவியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு: சென்னை மாணவி முதலிடம்
தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2019 - 20 -ஆம் கல்வியாண்டுக்கான சட்டவியல் படிப்புக்குரிய மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.
இத்தரவரிசைப் பட்டியலில் சென்னை வித்யா மந்திர் பள்ளி மாணவி என். மதுஸ்ரீ முதலிடத்தைப் பெற்றார். இவர் பிளஸ் 2 தேர்வில் 500-க்கு 484 மதிப்பெண்களும், சட்டவியல் மாணவர் சேர்க்கை பொதுத் தேர்வு (கிளாட்) 2019-இல் 149.25 மதிப்பெண்களும் பெற்றார்.
இப்பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 21) மாலை 5 மணி வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
சட்டப்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களிடமிருந்து மொத்தமுள்ள 120 இடங்களுக்கு ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
விரிவான தரவரிசை பட்டியல் விவரம் சாஸ்த்ராவின் www.sastra.edu என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சட்டப்படிப்புக்கான கலந்தாய்வு ஜூன் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தரவரிசைப் பட்டியலில் கலந்தாய்வுக்குத் தகுதி பெற்ற மாணவர்களுக்கான கலந்தாய்வுக் கடிதம் மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்பட்டுள்ளது.
மாணவர்களிடையே சட்டக் கல்வி பயில்வதற்குக் கடும் போட்டியும் ஆர்வமும் கடந்த ஆண்டைவிட நிகழாண்டில் அதிகரித்துள்ளது. சட்டத்துறையில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதே இதற்குக் காரணம் என சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ். வைத்யசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.