பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 5 பேர் சேலம் சிறைக்கு மாற்றம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய 5 பேரையும் பாதுகாப்பு கருதி, சிறைத் துறை அதிகாரிகள் சேலம் மத்திய சிறைக்கு சனிக்கிழமை மாற்றினர். 
கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன், திருநாவுக்கரசு ஆகிய 5 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு மாநில காவல் துறை வசமிடமிருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, பின்னர் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவிகள், இளம்பெண்கள், அவர்களது பெற்றோர், உறவினர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 
மேலும் கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் சிபிஐ அதிகாரிகள் பல கட்டமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களை காணொலிக் காட்சி மூலம் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த திங்கள்கிழமை ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, 5 பேரையும் வரும் ஜூலை 1-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார். 
அதைத் தொடர்ந்து 5 பேரும்  மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரையும், சிறைத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை காலை சேலம் மத்திய சிறைக்கு மாற்றினர்.  முன்னதாக காலை 9.30 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனம் மூலமாக சேலம் கொண்டு செல்லப்பட்டனர். பாதுகாப்பு கருதியே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com