குற்றாலம் பேரருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் உற்சாகம்
திருநெல்வேலி மாவட்டம், குற்றாலம் பகுதியில் பெய்த சாரல்மழையின் காரணமாக குற்றாலம் பேரருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுந்ததால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
குற்றாலத்தில் திங்கள்கிழமை அதிகாலை முதல் அவ்வப்போது சாரல்மழையும், இடையிடையே வெயிலும் என பருவ நிலை மாறி மாறி நிலவியது. இதனால், குற்றாலம் பேரருவியில் தண்ணீர்வரத்து பிற்பகல் முதல் அதிகரிக்கத் தொடங்கியது. தண்ணீர்வரத்து அதிகரித்தபோது, மலையிலிருந்து மரக்கிளைகள் முறிந்து பேரருவியில் பாதுகாப்பு வளைவின் மீது விழுந்தன. இதனால், சிறிதுநேரம் குற்றாலம் பேரருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.
பேரருவியில் பாதுகாப்பு வளைவின் மீது தண்ணீர்கொட்டியதால், சுற்றுலா பயணிகள் பேரருவியின் நடுப்பகுதியில் சென்று குளிக்க தடைவிதிக்கப்பட்டு ஓரமாக நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர். சுற்றுலா பயணிகளின் வருகை திங்கள்கிழமை குறைவாக இருந்ததால், வந்திருந்த அனைவரும் உற்சாகமாக நீண்ட நேரம் குளித்துச் சென்றனர். இதேபோல, ஐந்தருவி, பழையகுற்றாலம் அருவிகளிலும் தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளது.