திருப்பூரில் அரசுப் போக்குவரத்துக் கழக நடத்துநர்கள் ரூ.10 நாணயத்தை தவிர்க்குமாறு சுற்றறிக்கை அனுப்பிய விவகாரத்தில் கிளை மேலாளர் தனபால் தற்காலிக பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக (கோவை) மேலாண் இயக்குநர் அன்பு ஆபிரகாம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் திருப்பூர் மண்டலம் - கிளை 2 இல் மேலாளர் என்.தனபால் நிர்வாகத்திடம் முன் அனுமதி பெறாமல் தன்னிச்சையாக அவரது பணிமனைக்குத் தொடர்புடைய நடத்துநர்கள் ரூ.10 நாணயத்தை தவிர்க்குமாறு எழுத்துப்பூர்வமாக சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
நிர்வாகத்திடம் எந்த ஒப்புதலும் பெறாமல் தன்னிச்சையாக செயல்பட்டு பொது மக்களிடம் போக்குவரத்துக் கழகத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் அவர் நடந்து கொண்டுள்ளார்.
எனவே, இந்த சுற்றறிக்கையை ரத்து செய்வதுடன், இதற்குக் காரணமாக இருந்த கிளை மேலாளர் தனபால் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.