பிளஸ் 2 கணிதம், வணிகவியல், விலங்கியல் தேர்வுகள் சற்று கடினம்: சென்டம் குறைய வாய்ப்பு

பிளஸ் 2 பொதுத் தேர்வில் கணிதம், வணிகவியல், விலங்கியல் தேர்வுகள் சற்று கடினமாக இருந்ததாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர். 
பிளஸ் 2 கணிதம், வணிகவியல், விலங்கியல் தேர்வுகள் சற்று கடினம்: சென்டம் குறைய வாய்ப்பு



சென்னை,  மார்ச் 7: பிளஸ் 2 பொதுத் தேர்வில் கணிதம், வணிகவியல், விலங்கியல் தேர்வுகள் சற்று கடினமாக இருந்ததாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர். 
இதனால் அந்தப் பாடங்களில் முழு மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் குறைய வாய்ப்புள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.   பிளஸ் 2 பொதுத்தேர்வில் முக்கியப் பாடங்களுக்கான தேர்வுகள் வியாழக்கிழமை முதல் தொடங்கின.  
கணித பாடம் குறித்து சென்னையைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் எஸ்.கீதா,  டி.பிரியா, கே. சுகன்யா,  ஆர்.கார்த்திக் உள்ளிட்டோர் கூறியது:  கணித பாடத்தில்  ஒரு மதிப்பெண் பகுதியில் கேட்கப்பட்ட 20 வினாக்களில் 9 கேள்விகள் சிந்தித்து எழுதும் வகையில் கேட்கப்பட்டிருந்தன. அதேபோன்று  2 மதிப்பெண் வினாவில் ஐந்து மதிப்பெண்ணுக்குரிய வினாக்கள் 2 கேட்கப்பட்டிருந்தன. அந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்க நேரம் போதவில்லை.  கணித பாடத்தில் முழு மதிப்பெண் பெறுவதற்காக பல்வேறு முன் தயாரிப்புகளில் ஈடுபட்டோம். ஆனால் ஒரு மதிப்பெண் கேள்விகளால் சென்டம்  பெற முடியுமா எனத் தெரியவில்லை என்றனர். 
இது குறித்து சென்னையைச் சேர்ந்த கணித ஆசிரியர்கள் மாலதி,  ராஜேஷ் ஆகியோர் கூறுகையில்,  பிளஸ் 2 கணித வினாத்தாளில் அனைத்துக் கேள்விகளும் பாடப் பகுதியில் இருந்தே கேட்கப்பட்டிருந்தன.  இருப்பினும் ஒரு மதிப்பெண் பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகளவு மறைமுக வினாக்கள் இடம்பெற்றிருந்தன.  வினாத்தாள் ஓரளவுக்கு கடினமாகவே இருந்தது. ஆனால் ஐந்து மதிப்பெண் பகுதியில் மாணவர்கள் நன்கு எதிர்பார்த்த வினாக்களே கேட்கப்பட்டிருந்ததால் இந்த முறை கணிதத்தில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றனர்.  
வணிகவியல் வினாத்தாள்:கலைப்பிரிவு மாணவர்களுக்கு முக்கியப் பாடங்களில் முதல் தேர்வாக வணிகவியல் தேர்வு வியாழக்கிழமை நடைபெற்றது.  இது குறித்து மாணவ, மாணவிகள் கூறுகையில்,  மற்ற பாடங்களைக் காட்டிலும் வணிகவியல் பாடத்தில்தான் அதிக மதிப்பெண் பெற முடியும். ஆனால் பொதுத்தேர்வில்  இதுபோன்ற வினாத்தாளை நாங்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.  அந்தளவுக்கு பெரும்பாலான கேள்விகள் புதிதாக இருந்தன. காலாண்டு, அரையாண்டு மற்றும் கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற தேர்வுகளில் கூட கேட்கப்படாத வினாக்கள் இடம்பெற்றிருந்தன.  ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு கூட நன்கு யோசித்து பதிலளிக்க வேண்டியிருந்தது. 
அதேபோல் 3 மற்றும் 2 மதிப்பெண் வினாக்களும் கடினமாக இருந்தன. 5 மதிப்பெண் வினாக்கள் சற்று எளிதாக இருந்தன. தேர்ச்சி பெறுவதில் எந்த விதப் பிரச்னையும் இல்லை. ஆனால் அதே நேரத்தில் 100-க்கு 90 மதிப்பெண்களுக்கு மேல் கிடைப்பது சற்று கடினம் என்றனர். இதேபோன்று விலங்கியல் பாடத்தில் 1, 2 மதிப்பெண் வினாக்கள் மிகவும் கடினமாக இருந்ததாகவும் 
மற்ற வினாக்கள் எளிதாக இருந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com