அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், அந்தக் கட்சியின் மூத்த தலைவர் ஞானதேசிகன் உள்ளிட்டோர் புதன்கிழமை பிற்பகலில் வந்தனர். இவர்களை, அதிமுக நிர்வாகிகள் வரவேற்றனர். இதன் பிறகு, நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டி: அதிமுகவுக்கும், தமாகா -வுக்கும் இடையே புதன்கிழமை உருவான ஒப்பந்தத்தின்படி, அதிமுக தலைமையிலான கூட்டணியில் தமாகா -வுக்கு ஒரு மக்களவைத் தொகுதி ஒதுக்கப்படுகிறது. மேலும், தமிழகத்தில் இப்போது காலியாகவுள்ள 21 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தமாகா, தனது முழு ஆதரவை அளிக்கும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணி இப்போதைய நிலவரப்படி, தற்காலிகமாக நிறைவு பெற்றிருக்கிறது என்றார் ஓ.பன்னீர்செல்வம்.
ஜி.கே.வாசன் பேட்டி: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும், எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆசியோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் அதிமுகவுடன் இணைந்து மக்களவைத் தேர்தல் கூட்டணியை மகிழ்ச்சியுடன் செய்துள்ளோம். இந்தக் கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றார் ஜி.கே.வாசன்.