அரசியலமைப்பு பதவியில் இருந்து கொண்டு அரசியல் செய்யக் கூடாது என்று புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி மீது, முதல்வர் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.
தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், புதுவை ஆளுநர் கிரண் பேடி தனது கள ஆய்வுப் பணியை நிறுத்தி வைத்துள்ளார். மேலும், ஆளுநர் மாளிகையில் குறைகேட்பு மனுக்கள் பெறுவதும், சமூக ஊடக நடவடிக்கைளும் தேர்தல் முடியும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை அறிவித்தது. இந்த நிலையில், பிரதமர் மோடி தனது சுட்டுரையில் ஜனநாயக நாட்டில் வாக்களிப்பது
குடிமக்களின் பொறுப்பு; வாக்களிப்பது மக்கள் அனைவருக்கும் ஆர்வத்தையும் தரும். உலகில் மிகப் பெரிய நாடான இந்தியாவில் வாக்களிப்பதை தொழில்நுட்பம் உறுதி செய்கிறது என புதன்கிழமை பதிவு செய்திருந்தார். இதையடுத்து, மோடியின் இந்த சுட்டுரை பதிவை, புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, தனது சுட்டுரையில் மீண்டும் பதிவு செய்திருந்தார்.
இதை அறிந்த முதல்வர் நாராயணசாமி, கிரண் பேடியின் பதிவை, தனது சுட்டுரையில் பதிவு செய்து, அதன் மீதான தனது கருத்தையும் பதிவிட்டார். அதில், பிரதமர் மோடிக்கும், பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடிக்கும் இடையிலான வேறுபாடுகளைப் புரிந்து கொள்ள வேண்டும். அரசியலமைப்பு வழங்கிய பதவியில் அமர்ந்து கொண்டு, அரசியல் செய்யாதீர்கள்.
உங்களுடைய தலைவர் பிரதமர்தான். பாஜகவின் பிரதமர் வேட்பாளர் அல்ல. தேர்தல் ஆணையம், இந்த விதிமீறல் மீது நடவடிக்கை எடுக்குமா? எனக் குறிப்பிட்டிருந்தார்.தேர்தல் அறிவிப்புக்கு முன்பு வரை, ஆளுநர் கிரண் பேடி-முதல்வர் நாராயணசாமி இடையே கெடுபிடி யுத்தம் இருந்து வந்தது.
தேர்தல் அறிவிப்பு வெளியானதும் கடந்த சில நாள்களாக அறிக்கை மோதல் எதுவும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில், சுட்டுரை பதிவு மூலம், இருவருக்கும் இடையே மீண்டும் கருத்து மோதல் எழுந்துள்ளது.